ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கிய விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் சட்டப்படி அனுமதிக்கப்படாத முறையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்


தமிழகத்தில் சட்டப்படி அனுமதிக்கப்படாத முறையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழகத்தில் உள்ள நெடுவாசல், காரைக்குடி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜெம் லெபாரட்ரீஸ், பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது. 
அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன்களையும் ஒற்றை உரிமம் மூலம் எடுக்க இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது சட்ட விரோதமானது. மேலும் பூமியின் அடியில் இருக்கக்கூடிய ஹைட்ரோ கார்பனை சட்டப்படி அனுமதிக்காத முறையில் எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com