சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சல்வார்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைக்கு 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் வேன் ஒன்று இன்று காலை புறப்பட்டது. இந்த வேன் காயில்பட்டியில் ஒரு வளைவில் வளையும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சிவகாசியை சேர்ந்த குருமுத்து(36), துரைபாண்டி(16) மற்றும் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
எனவே அவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.