சுபஸ்ரீ உயிரிழந்ததையடுத்து, சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இதுவரை 4000 பேனர்களை அகற்றி, 245 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
சுபஸ்ரீயின் விபத்துக்குப் பிறகு பேனர் விவகாரத்தை பிரதானப் பிரச்னையாக கையிலெடுத்துள்ள தமிழக அரசு, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் பேனர்களை அகற்றி சட்டரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கூட்டம் ஆணையாளர் கோ. பிரகாஷ் தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் ஆணையாளர் பிரகாஷ் இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக பேனர்கள் வைத்தால் பொது மக்கள் புகார் அளிப்பதற்காக புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோந்து வாகனங்களில் பணியில் உள்ள அலுவலர்கள் உடனடியாக சம்பந்தபட்ட இடத்திற்கு நேரடியாக சென்று விளம்பர பதாகைகளை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து விளம்பரம் அமைத்தவர்கள் குறித்த தகவல்களையும் பதிவு செய்த பின்னர் அவற்றை அகற்றி சம்பந்தபட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மண்டலம் 1 முதல் 5 வரையிலான வடக்கு வட்டாரம்: 9445190205
மண்டலம் 6 முதல் 10 வரையிலான மத்திய வட்டாரம்: 9445190698
மண்டலம் 11 முதல் 15 வரையிலான தெற்கு வட்டாரம்: 9445194802
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் பேசுகையில், "சென்னையின் அனைத்து மண்டல அதிகாரிகளுடனும் கூட்டம் நடைபெற்றது. அதில், சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்களைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடத்தில் பேனர் வைப்பதன் விளைவுகளை அறியாமல் அதில் ஈடுபடும் பிரிண்டிங் பிரஸ் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு இதுதொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.