தமிழகத்தில் 365 நாள்களும் தடுப்பூசி போடப்படும் : சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் 365 நாட்களும் தடுப்பூசிகள் போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 
தமிழகத்தில் 365 நாள்களும் தடுப்பூசி போடப்படும் : சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்


 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் 365 நாட்களும் தடுப்பூசிகள் போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். 
தமிழக சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய்கள் (விபிடி) கண்காணிப்பு மற்றும் திருத்தப்பட்ட தட்டம்மை ரூபெல்லா ஒழிப்பு உத்தி பற்றிய மாநில அளவிலான கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை  நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கருத்தரங்கை தொடக்கி வைத்து, தடுப்பூசிகள் குறித்த கையேட்டினை வெளியிட்டார். பின்னர், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது: 
தமிழகத்தில் போலியோ நோய் கண்காணிப்பு திட்டம் 1997-ஆம் ஆண்டும், தட்டம்மை ரூபெல்லா கண்காணிப்பு திட்டம் 2017-ஆம் ஆண்டிலிருந்தும்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் தடுப்பூசியினால் தடுக்கப்படக்கூடிய நோய்களுக்கான தீவிர கண்காணிப்புத் திட்டம் இந்தியாவிலேயே முதல்முறையாக  தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இளம் சிசுக்களுக்கு ஏற்படும் ரணஜன்னி போன்ற தடுப்பூசியினால் தடுக்கப்படக்கூடிய நோய்களுக்கான தீவிர கண்காணிப்புத் திட்டம் வாரந்தோறும் செயல்படுத்தப்பட உள்ளது. தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் வரும்  2023-ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக தற்போது 99 சதவீதம் தடுப்பூசி அளிக்கப்பட்டு வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மீதமுள்ள 1 சதவீதத்தினருக்கும் தடுப்பூசி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 15 வயதுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு புதன்கிழமையும் தோறும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இனி அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் 365 நாள்களிலும் தடுப்பூசிகள் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில்,  உலக சுகாதார நிறுவன மண்டல தலைவர் ஆசிஷ் கே. சதாபதி, பொதுசுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com