புதிய மாவட்டங்களைப் பிரிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து, இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான தனி அதிகாரிகளையும் அவர் நியமித்துள்ளார். இந்த நிலையில், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட உயரதிகாரிகள் கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பொது மக்களின் கருத்துகளைக் கேட்டனர்.
முதல்வர் ஆலோசனை: புதிய மாவட்டங்களைப் பிரிப்பது தொடர்பாக கருத்துகளை அறிந்து வந்துள்ள உயரதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், கள்ளக்குறிச்சி, தென்காசி புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான தனி அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.