அண்ணா பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு முதல்வர் உள்ளிட்டோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் அதிமுக கட்சிக் கொடிகள், பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை.
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ விபத்துக்குள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கட்சி மற்றும் இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அதிமுக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும், சுபஸ்ரீயின் உயிரிழப்பு மிகுந்த கவலையளிக்கிறது என்றும் அதிமுக இரங்கல் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக இன்று சென்னையில் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், தொண்டர்கள் பலர் அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர். வழக்கமாக இதுபோன்ற விழாக்களின் போது அதிமுக கட்சிக் கொடிகள், பேனர்கள் வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், சுபஸ்ரீ உயிரிழப்பை அடுத்து அதிமுக வெளியிட்ட அறிவிப்பால், இன்றைய நிகழ்ச்சியில் கட்சிக் கொடிகள், பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.