சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லையா சத்யா உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது.
மதிமுக நடத்தும் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு அவர் உரையாற்றியதாவது,
மதிமுக மாநாட்டில் இதுதான் எனது முதல் உரை. திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றி இருந்தபோது, கோபாலபுரம் வந்த வைகோ, திமுக-வுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதாக வாக்குறுதி அளித்தார்.
திராவிட இயக்கத்தில் நான் எப்படி நிரந்தர தளபதியோ, அதேபோல் நிரந்தர போர்வாள் வைகோ தான். நீர் அடித்து நீர் விலகாது என்பது போல் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்று பேசினார். அப்போது மேடையில் இருந்த வைகோ உணர்வுப்பூர்வமாக கண்கலங்கினார்.