மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது.
சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், அரியலூரில் தலா 150 மி.மீ., தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், தருமபுரி மாவட்டம் அரூரில் 110 மி.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தலா 70 மி.மீ. மழை பதிவானது.
வடதமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கரூர், நீலகிரி, நாமக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தருமபுரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், திருச்சி ஆகிய 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.