கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்ததாக, கோயில் தீட்சிதர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ராஜ்யசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் ஆனி, மார்கழி தரிசன விழாக்களின்போது ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகமும், திருவாபரண அலங்காரக் காட்சியும் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபரின் குடும்ப திருமண நிகழ்ச்சி கடந்த 12-ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆனால், கோயில் மரபை மீறி, ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமணத்துக்கு அனுமதி அளித்தது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், கோயில் பொது தீட்சிதர்களின் செயலர் பாலகணேச தீட்சிதர் சனிக்கிழமை கூறியதாவது: ஆயிரங்கால் மண்டபத்தில் தனியார் திருமணத்துக்கு அனுமதி அளித்த பட்டு தீட்சிதருக்கு ரூ.1,001 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர் மூன்று சுற்று முறை (2 மாதங்கள்) சித் சபையில் ஏறி பூஜை செய்வதிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.