தமிழகம் முழுவதும் சனிக்கிழமையன்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 65 ஆயிரம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.249 கோடியே 59 லட்சத்து 7 ஆயிரம் கிடைத்துள்ளது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, 2019 ஆம் ஆண்டு மார்ச், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நடத்த தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. இந்த வகையில் சனிக்கிழமை, தமிழகம் முழுவதும் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. இதில் காசோலை மோசடி வழக்கு, வங்கிக் கடன், தொழிலாளர் வழக்கு, மின்சாரம், குடிநீர் கட்டணம், ஜீவனாம்ச வழக்கு, விபத்து வழக்கு 21 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன், சி.வி.கார்த்திகேயன், என்.சதீஷ்குமார், வி.பவானி சுப்பராயன், எம்.தண்டபாணி, பி.ராஜமாணிக்கம், ஜி.கே.இளந்திரையன் மற்றும் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் மலைசுப்ரமணியம்,பி.தங்கவேலு ஆகியோர் தலைமையில் 10 அமர்வுகளும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எம்.கோவிந்தராஜ், நிஷாபானு, டி.கிருஷ்ணவள்ளி, பி.டி.ஆஷா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம் உள்ளிட்டோர் தலைமையில் 6 அமர்வுகளும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில்
வங்கி தொடர்பான வழக்குகளை மட்டும் விசாரிக்க 8 சிறப்பு அமர்வுகளும், மாவட்டம் மற்றும் தாலுகா அளவிலான நீதிமன்றங்களில் 489 அமர்வுகள் என மொத்தம் 513 அமர்வுகள் அமைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 21 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 65 ஆயிரத்து 394 வழக்குகள் இருதரப்பு சமரசத்துடன் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.249 கோடியே 59 லட்சத்து 7 ஆயிரம் கிடைத்துள்ளது.