இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகும் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் மையமான உத்தரகண்ட் மாநிலத்தின் முசெளரியில் உள்ள "லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாதெமி'யில் தமிழ்நாடு மாநில தினம் கொண்டாடப்பட்டது.
இப்பயிற்சி மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமைப் பணி அதிகாரிகளுக்குப் பிற மாநிலங்களின் கலை, பண்பாடு, வாழ்க்கை முறையில் உள்ள பழக்க வழக்கங்கள் குறித்து தெரியப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலத்தின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டிலிருந்து அந்த நிகழ்ச்சி அகாதெமியால் விரிவாக்கம் செய்யப்பட்டு ஒவ்வொரு "மாநில தினம்'-ஆக அனுசரிக்கப்படுகிறது.
இதன்படி தமிழ்நாடு மாநில தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்ப் பண்பாடு, கலைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், தமிழ் கலாசார முறையில் வண்ணக்கோலம், அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானை உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. தமிழகத்தின் பாரம்பரிய வரவேற்பு முறையில் பெண்கள் புடவை அணிந்து விருந்தினர்களை வரவேற்றனர்.
புது தில்லி தமிழ்நாடு இல்லத்திலிருந்து 12 அலுவலர்கள், தமிழ் கலாசார உணவு தயாரிக்கும் 5 சமையலர்கள் அடங்கிய குழு ஒன்று அகாதெமி அலுவலர்களுடன் இணைந்து அலங்காரம், உணவு தயாரிப்பு பணிகளைச் செய்திருந்தது. இதற்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா செய்திருந்தார்.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பயிற்சி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி, பாரம்பரிய பண்பாட்டு நடனங்களை ஆடினர்.
விருந்தினர்களுக்கு தமிழ் பாரம்பரிய உணவு வகைகள் தலைவாழை இலையில் விருந்தாக படைக்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த இளம் பயிற்சி அதிகாரிகள் தங்களது பண்பாட்டுக் கலைத் திறனை வெளிப்படுத்தும் விதமாக மேடையில் சிலம்பம், கிராமிய நடனங்களை ஆடி விருந்தினர்களை மகிழ்வித்தனர்.
பயிற்சி அகாதெமியின் இயக்குநர் சஞ்சீவ் சோப்ரா, சிறப்பு இயக்குநர்கள் ஆர்த்தி அகுஜா, மனோஜ் அகுஜா, இளம் பயிற்சி அதிகாரிகளுக்குப் பொது நிர்வாகம் குறித்த பயிற்சியை வழங்கக் கூடிய தமிழ்நாடு மாநில தொகுப்பைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி அமுதா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 35 நாட்டுப்புறக் கலைஞர்கள், 7 பரதநாட்டிய மாணவர்கள் உள்ளிட்டோர் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். தமிழ்நாடு அரசின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மற்றும் பூம்புகார் நிறுவனத்தின் சிறிய அளவிலான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் நிறைவில் அகாதெமியின் இயக்குநர் சஞ்சீவ் சோப்ரா நன்றி தெரிவித்தார்.
தற்போது 2019-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர், ஐபிஎஸ் அதிகாரிகள் 2 பேர், இந்திய வனப் பணிக்கு தேர்வான 4 பேர், இதர ரயில்வே, கணக்குத் துறைக்குத் தேர்வானஅதிகாரிகள் என மொத்தம் 22 பேர் இந்த அகாதெமியில் பயிற்சியில் உள்ளனர்.