கோவையில் 56 வயது மதிக்கத்தக்க பெண் வயிற்றில் இருந்து 7 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
இதுதொடர்பாக அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செந்தில் குமார் கூறுகையில்,
வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தோம். அப்போது வயிற்றுப்பகுதி முழுவதும் மிகப்பெரிய அளவிலான கட்டி பரவியிருந்தது தெரியவந்தது.
அந்த கட்டியானது குடல், கருப்பை, வலது சிறுநீரகம் மற்றும் வலது சிறுநீரகக் குழாய் உள்ளிட்ட பகுதிகளில் பரவியிருந்தது. இதனால் அப்போது அறுவை சிகிச்சை செய்தால் அது உயிருக்கு ஆபத்தான நிலையில் அமையும் என்பதால் அதனை மேற்கொள்ளவில்லை. சில காலத்துக்குப் பிறகு அதனை அகற்றலாம் என முடிவு செய்தோம்.
இந்நிலையில், சவால் மிகுந்த அந்த அறுவை சிகிச்சை தற்போது மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்து கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளோம் என்று தெரிவித்தார்.