சென்னை: அடுத்த 48 மணி நேரத்துக்கு குமரிக்கடல், மாலத்தீவு, இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, வெப்பச் சலனம் மற்றும் வட தமிழகத்தின் வளி மண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யலாம்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், குமரிக்கடல், மாலத்தீவு, இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.