தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றியைப் பெரும் என்று தமிழக மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் அண்ணாவின் 111-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் குமாரபாளையம் நகர அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தங்கமணி பேசியது :
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அதிமுக அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் நாள்தோறும் அறிக்கை விட்டார்.
இந்தப் பயணத்தால் ரூ.8,800 கோடி முதலீடுகள் வந்துள்ளதுடன், 37 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு, தொழில் தொடங்க பல்வேறு தரப்பினரும் விரும்புகின்றனர். மத்திய அரசுடன் கூட்டணி வைத்திருந்தாலும், கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும்போது முதலில் குரல் எழுப்புவது அதிமுகவே ஆகும். எந்தச் சூழலிலும் தமிழகத்தின் நலனை அதிமுக விட்டுக் கொடுக்காது. குடிமராமத்துத் திட்டம் மூலம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேமிக்கப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளால் தமிழக மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதனால், விரைவில் தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக 100 சதவீத வெற்றியை பெறும் என்றார்.