துணைவேந்தர் பதவி: தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம்: ஆளுநரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்

பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் பதவிகளில் தலித், பழங்குடியின சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் பதவிகளில் தலித், பழங்குடியின சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சென்னை ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை மாலை சந்தித்த திருமாவளவன், இதுதொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 21 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் இப்போதைய நிலையில் தலித் அல்லது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட துணைவேந்தராகவோ, பதிவாளராகவோ நியமிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதில், பல்கலைக்கழக உயர் பதவிகளில் தலித்துகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தது. அதனடிப்படையில், பல்கலைக்கழகங்களின் வேந்தரான தமிழக ஆளுநரைச் சந்தித்து, துணைவேந்தர், பதிவாளர் பதவிகளில் தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளோம்.
மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக விரைவாக முடிவெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தோம். இந்தக் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகக் கூறியிருக்கிறார். உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com