கட்டுமான அனுமதி வழங்குவதற்கு முன்னதாக, வரைபடத்துக்கு ஒப்புதல் அளித்திருப்பது பதிவு செய்த கட்டடவியலாளரா என்பதை உறுதி வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கட்டுமானப் பொறியியல் துறையில் டிப்ளமோ அல்லது பி.இ. முடிப்பவர்கள், கட்டடவியல் கவுன்சிலில் (கவுன்சில் ஆப் ஆர்க்டெக்ட்) முறையாக பதிவு செய்த பின்னரே, கட்டடவியலாளராகப் பணியாற்ற முடியும்.
ஒரு கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, இதுபோன்ற கட்டடவியலாளர்களின் ஒப்புதல் பெறப்பட்ட கட்டுமான வரைபடத்தைச் சமர்ப்பித்தால் மட்டுமே நகராட்சி அல்லது மாநகராட்சி அனுமதி அளிக்கும். அதன் பிறகே கட்டுமானத்தைத் தொடங்க முடியும்.
இந்த நிலையில், போலி கட்டடவியலாளர்கள் தொடர்பாக புகார்கள் வந்ததை அடுத்து, அவர்களின் பதிவை உறுதி கட்டடவியல் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில், அனைத்து பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி முதல்வர்கள், அனைத்து நகராட்சி ஆணையர்கள், கிராம, பஞ்சாயத்து வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள், திட்ட அலுவலர்கள் ஆகியோருக்கு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், கட்டுமான வரைபடத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கும் கட்டடவியலாளர், கட்டடவியல் கவுன்சிலில் பதிவு செய்தவரா என்பதை சோதித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தப் பதிவையும், அதன் உண்மைத்தன்மையையும் www.coa.gov.in என்ற இணையதளத்தில் பரிசோதித்துக்கொள்ளலாம் எனவும் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.