பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு ஒரே தாளாக தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த வகுப்புக்கு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, பத்தாம் வகுப்புக்கு மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாணவர்களின் மன அழுத்தம், கால விரயத்தை குறைக்கும் வகையில் பத்தாம் வகுப்புக்கு மொழிப் பாடங்கள் இனி முதல் தாள், இரண்டாம் தாள் என நடத்தப்படாது. மாறாக மொழிப் பாடங்களுக்கான இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை கடந்த 13-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில், பத்தாம் வகுப்புக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வு கால அட்டவணையை அரசுத்தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார். அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திருத்தப்பட்ட அட்டவணை
27-03-2020 வெள்ளிக்கிழமை மொழிப்பாடம்
28-03-2020 சனிக்கிழமை விருப்ப மொழிப்பாடம்
31-03-2020 செவ்வாய்க்கிழமை ஆங்கிலம்
03-03-2020 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்
07-03-2020 செவ்வாய்க்கிழமை அறிவியல்
13-04-2020 திங்கள்கிழமை கணிதம்