சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில ராமாணீ இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வி.கே.தஹில ராமாணீ கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீயை, மேகாலய மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்தும், மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் சிறந்த நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தனது பணி இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ உச்சநீதிமன்ற கொலீஜியத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், பணியிட மாற்றத்துக்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ, கடந்த செப். 6 பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் , அதன் நகலை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கும் அனுப்பி வைத்துள்ளார். தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ வரும் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில ராமாணீ இடமாற்றத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அப்போது கொலீஜியம் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகாதது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனு பட்டியலிடப்பட்டபின் விசாரிப்பதாக உறுதியளித்தனர்.