தமிழகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை வரும் நவம்பர் மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழகம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இந்துக் கோயில்களை நிர்வகிக்கும் வகையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் சட்டப் பிரிவுகளில் சில, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருப்பதால் அவற்றை அதிகாரத்திற்கு அப்பாற்றப்பட்டதாக அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட மூன்று பேர் கடந்த 2012-இல் வழக்குத் தொடுத்தனர்.
அதில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959-இன் பிரிவுகள் சிலவும், ஆந்திர பிரதேச அறக்கட்டளை மற்றும் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைச் சட்டம் 1987 ஆகியவற்றின் சில பிரிவுகளும், புதுச்சேரி சட்டம் 1972-இன் சில பிரிவுகளும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. இவை அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே, வினோத் கண்ணா ஆகியோர் ஆஜராகினர். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், வேறொரு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருப்பதால், மனு மீதான விசாரணையை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நவம்பர் முதல் வாரத்தில் விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.