சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பனுக்கு திங்கள்கிழமை (செப்.16) ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை மேற்கு தில்லி, மோதிநகர் சுதர்சன் பார்க் பகுதியைச் சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், நான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்தவன். நான், என்னுடைய மகனுடன் சேர்ந்து வரும் 30-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பல இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யவுள்ளேன் என எழுதியிருந்தது.
இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எஸ்.மணிக்குமார், கே.கே.சசிதரன் ஆகியோருடன் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரி ஸ்ரீராம் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டத்தில் உயர்நீதிமன்றத்துக்கு வந்த மிரட்டல் கடிதம் தொடர்பாகவும், உயர்நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் வரும் அனைத்து வழக்குரைஞர்களும் தங்களின் அடையாள அட்டையை, சோதனை மேற்கொள்ளும் போலீஸாரிடம் காண்பிக்க வேண்டும்.
வழக்குரைஞர்களின் வாகனங்களையும் போலீஸார் சோதனையிட அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் மற்ற வழக்குரைஞர்கள் சங்கத்தினர் உரிய அறிவுறுத்தல்களை அனைத்து வழக்குரைஞர்களும் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு கூடுதல் துணை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.