எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் 97-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு புதுவை முதல்வர் வே. நாராயணசாமி செவ்வாய்க்கிழமை நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
கி. ரா. என்று அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கடந்த 1922 -ஆம் ஆண்டு, செப்டம்பர் 16 -ஆம் தேதி, அப்போதைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம், இடைசெவல் கிராமத்தில் பிறந்தவர்.
சாகித்ய அகாதெமி விருது, இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா நாட்டின் தமிழ் இலக்கியத் தோட்ட விருது, தமிழ் இலக்கியச் சாதனை விருது, மனோன்மணீயம் சுந்தரனார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தற்போது, புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசிக்கிறார். அவர் தனது 97-ஆவது பிறந்த நாளை செப்டம்பர் 16 -ஆம் தேதி கொண்டாடினார்.
அவருக்கு புதுவை முதல்வர் வே. நாராயணசாமி செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, வைத்திலிங்கம் எம்பி, சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்என்ஆர். பாலன் ஆகியோர் உடனிருந்தனர். இதேபோல, பல்வேறு இலக்கிய ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பலர் எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.