5, 8-ஆம் வகுப்புகளுக்கு  பொதுத் தேர்வு கூடாது:  கமல்ஹாசன்

ஐந்து மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
5, 8-ஆம் வகுப்புகளுக்கு  பொதுத் தேர்வு கூடாது:  கமல்ஹாசன்


ஐந்து மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
 இது தொடர்பாக அவர் புதன்கிழமை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: 
ஒரு தும்பியின் வாலில் பாராங்கல்லைக் கட்டி பறக்கவிடுவது, எவ்வளவு கொடுமையான விஷயமோ அதை விட கொடுமையானது 10 வயசு பையன் மனதில் பொதுத் தேர்வு எனும் சுமையைக் கட்டி வைப்பது.
இந்தக் கல்வித் திட்டம் நம்ம குழந்தைகளுக்கு எதை சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தை கண்டிப்பாக சொல்லிக் கொடுக்கும்.
இந்தத் திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது, குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு பயம்தான் அதிகமாகும்.
ஜாதிகளாலும் மதங்களினாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விட மதிப்பெண்களால் ஏற்படப்போகும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கப் போகிறது.
இந்தப் பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும் போது ஒரு குழந்தை, இந்த சமூகத்தில் வாழ்வதற்கு நமக்கு தகுதியே இல்லையோ என்ற தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கி போகும்.
நான் எட்டாம் வகுப்போடு என் படிப்பை நிறுத்தியதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் இனி எந்த ஒரு குழந்தை படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் இப்போது அமல்படுத்தியிருக்கும் பொதுத் தேர்வு மட்டும் தான் முக்கியக் காரணமாக இருக்கும். 
குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எள்ளளவும் பயன் தராத இந்தப் புதிய கல்வி திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதுடன், இந்த திட்டதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதற்கு பதிலாக பள்ளி கட்டடங்களை மேம்படுத்துவதிலும், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் நீங்கள் கவனம் செலுத்தினால் மாற்றம் இனிதாகும் என்று கமல் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com