பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-இல் மாமல்லபுரத்துக்கு வருகை தருவதை முன்னிட்டு, புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளுக்கு வண்ணம் தீட்டும் பணி மற்றும் சீரமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.
சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி 3 நாள் பயணமாக வருகை தரவிருக்கின்றனர்.
இங்குள்ள கடற்கரைக் கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், ஆதிவராக மண்டபம், கோவர்த்தன மண்டபம் உள்ளிட்ட புராதனச் சின்னங்களை அவர்கள் சுற்றிப் பார்க்க உள்ளனர்.
இதனால், மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள பாரம்பரியச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சமூக விரோதிகள்நுழையாத வண்ணம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பு வேலிகளுக்கு வண்ணம் தீட்டும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதனையடுத்து, மாமல்லபுரம் முழுவதும் உள்ள கம்பி வேலிகள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டி அழகுபடுத்தப்படும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.