சென்னை: புதன்கிழமை பெய்த கன மழையின் போது சென்னை விமான நிலையத்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகிய சம்பவம் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
சென்னையில் கடந்த புதன்கிழமை இரவு கன மழை பெய்தது. சுமார் 10 ஆண்டுகள் பழமையான சென்னை விமான நிலையக் கட்டடத்தின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியது. உடனடியாக அதிகாரிகள் அதனை சரி செய்யுமாறு உத்தரவிட்டனர். நீர் ஒழுகிய இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் டப்பாக்களை வைத்து மழை நீர் வெளியே சிந்தாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
இது குறித்து விமான நிலையத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் கூறுகையில், விமான நிலையத்தின் மேற்கூரை ஒழுகுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்குள் அதனை சரி செய்து விடுவோம். இது மிகச் சிறிய விஷயம். உடனடியாக சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், திமுக எம்.பி. கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. முதலில் மேற்கூரையே பிளந்து கொண்டுவிழும், தற்போது இது ஒழுக வேறுச் செய்கிறது என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.