திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற பஞ்சாமிர்த கடை உரிமையாளர் வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மதுரையில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.90 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனைக் கடைகளில் ஆகஸ்ட் மாத இறுதியில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பழனி அடிவாரம் பகுதியில் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை செய்யும் கடைகளில் இரண்டு நாட்களுக்கும் மேலாக வருமானவரித் துறை மற்றும் வருமானவரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கடைகளில் மட்டுமின்றி, சார்பு நிறுவனங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
சோதனையின் போது ரூ.90 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இன்று உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.