முறைகேடு எதிரொலி: மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு

முறைகேடு செய்து மாணவர் ஒருவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நிகழாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த அனைத்து மாணவர்களது ஆவணங்களும்


முறைகேடு செய்து மாணவர் ஒருவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நிகழாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த அனைத்து மாணவர்களது ஆவணங்களும் சரிபார்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் அப்பணிகளை மேற்கொண்டு மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அதுதொடர்பான விவரங்களை அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக உள்ள அவரது மகனான உதித் சூர்யா கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதினார். ஆனால், அதில், தேர்ச்சியடைவில்லை. 
இந்நிலையில், நிகழாண்டில்,  மும்பையில் அவர் தேர்வு எழுதியதாகக் கூறப்பட்டது. அதில் 385 மதிப்பெண்கள் பெற்று அவர் தேர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. 
இதையடுத்து கலந்தாய்வில் தேனி மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்து அங்கு அவர் சேர்ந்து படித்து வந்தார்.
இந்த நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் ஒன்று வந்தது. உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
மேலும், அவரது நீட் தேர்வு நுழைவுச் சீட்டிலும், கலந்தாய்வு மற்றும் கல்லூரி சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்திலும் வேறு வேறு புகைப்படங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் 4 பேர் கொண்ட பேராசிரியர் குழுவை அமைத்து விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டார். அந்த விசாரணையில், அந்த மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதற்கான முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. 
இதைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி சார்பில் அந்த மாணவருக்கு எதிராக தேனியில் உள்ள காவல் நிலையத்தில் இதுதொடர்பாக  அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நிகழாண்டு மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயாண பாபு கூறியதாவது:
உதித் சூர்யா விவகாரத்தில் நீட் தேர்வு நுழைவு சீட்டிலும், கலந்தாய்விலும், கல்லுôரி சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்திலும் ஒரே மாதிரியான புகைப்படம்தான் இருந்தது. கலந்தாய்வில் இடம் கிடைத்த பிறகு கல்லூரியில் சேர 20 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. 
அந்த நேரத்தில்தான் புகைப்படம் மாற்றப்பட்டு வேறு நபர் கல்லூரியில் சேர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.நிகழாண்டு, எம்.பி.பி.எஸ்.,  பி.டி.எஸ். படிப்புகளில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் ஆவணங்களையும் சரிபார்க்க மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com