வக்பு வாரியத்தை நிர்வகிக்க தனி அதிகாரியாக நிதித்துறை முதன்மைச் செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவராக ஏ.அன்வர் ராஜா செயல்பட்டார். மக்களவை உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் வக்பு வாரியத்தின் தலைவராகச் செயல்பட்டார். ஆனால், அவரது எம்.பி. பதவி நிறைவடைந்த நிலையில் வக்பு வாரியத் தலைவர் பதவியும் நிறைவடைந்தது.
இந்த நிலையில், வக்பு வாரியத்தில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை விட, நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த எண்ணிக்கையானது வக்பு வாரிய விதிகளை நிறைவு செய்யாத காரணத்தினால், வாரியத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளராக (செலவினம்) உள்ள எம்.ஏ.சித்திக், தனி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, சிறுபான்மையினர் நலத் துறை செயலாளர் ஏ.கார்த்திக் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தனி அதிகாரி நியமனம் தொடர்பாக வக்பு வாரிய உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், எம்எல்ஏ முகமது அபுபக்கர் உள்ளிட்ட நான்கு பேர் மட்டுமே கருத்துகளைத் தெரிவித்தனர். அதில், தனி அதிகாரி நியமனத்தை கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.