போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புதிய அபராதத் தொகையை குறைப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருவதாகவும், இதுதொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், சிறைத் தண்டனை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இந்தத் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் சில மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும், தமிழகத்தில் இந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, அபராதத் தொகையை அந்தந்த மாநில அரசுகளே குறைத்துக் கொள்ளலாம் என மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் தெரிவித்தார்.
அரசாணை: இந்நிலையில், இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் சென்னையில் கூறுகையில், தமிழகத்தில் பழைய அபராத முறையே பின்பற்றப்படுகிறது. திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் அபராதத்தைக் குறைப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மத்திய அரசு கொண்டு வந்த விதிகளில் அனைத்து விதிமீறல்களுக்கான அபராதத்தையும் குறைக்க முடியவில்லை. அதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. நிச்சயமாக அபராதம் குறைக்கப்படும். இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றார்.