யாருடைய அடையாளத்தையும் எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சென்னையில் பிகில் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், நடிகர் கதிர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப் படத்துக்கு பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகள் எழுதியிருக்கிறார்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தின் சிங்கப் பெண்ணே, உனக்காக பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜய் பேசியது:
வாழ்க்கை என்பது கால்பந்து விளையாட்டு மாதிரி. நாம் அனைவருமே கோல் அடிக்க ஆசைப்படுவோம். அதைத் தடுக்க ஒருகூட்டம் வரும். நம் கூட இருப்பவர்களே சேம் சைட் கோல் போடுவார்கள். யாருடைய அடையாளத்தையும் எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
உலகத்திலேயே உழைத்தவனை மேடையேற்றி அழகு பார்க்கும் முதலாளி ரசிகன்தான். வெறித்தனம் பாட்டுக்காக ஒரு சாம்பிள் பாடி ஏ.ஆர். ரகுமானுக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் அவர் மும்பைக்கு சென்று விட்டார்.
ஒருவேளை நான் பாட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களோ என்று நினைத்தேன். ஆனால், அட்லி தொலைபேசியில் அழைத்து, ஏ.ஆர்.ரகுமான் ரெக்கார்டிங்க்கு கூப்பிட்டதாகச் சொல்லும்போதுதான் எனக்கே தெரிந்தது.
அரசியல்ல புகுந்து விளையாடுங்க; ஆனா விளையாட்டில் அரசியல் பார்க்காதீர்கள். சுபஸ்ரீ விவகாரத்தில் சுட்டுரையில் ஒரு ஹேஷ்டேக் கொண்டு வந்திருந்தா நன்றாக இருந்திருக்கும். யார் மேல பழிபோடுறது என தெரியாமல் லாரி ஓட்டுநர், பேனர் அச்சடித்தவர்கள் மீது பழி போடுகிறார்கள்.
எனது புகைப்படத்தை, பேனரை கிழியுங்கள்; என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் எனது ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றார் நடிகர் விஜய்.