சென்னை: காலையில் கண்விழித்துப் பார்க்கும் போது மழை பெய்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? ஆம் அதுபோன்ற நாட்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.
மழை நிலவரம் தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் இன்று வெளியிட்டிருக்கும் பதிவில், காலையில் மழை பெய்யும்படியான சில நாட்கள் வர உள்ளன. வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் சுழற்சிக்குள் சுழற்சி ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம். இதன் காரணமாக நாளை சிறப்பானதொரு மழையை எதிர்பார்க்கலாம்.
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை மழை வச்சி செய்யப் போகுது. கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமல்ல, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கும் கன மழை வாய்ப்பு உள்ளது. திண்டுக்கல், திருச்சியும் இந்த மழை விருந்தில் பங்கேற்கும்.
பெங்களூரு கடந்த ஒரு சில மாதங்களாகவே வெப்பம் தாக்கி வந்த நகரங்களின் பட்டியலில் இருந்தது. தற்போது அங்கும் மழைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
தென்மேற்குப் பருவ மழையின் நிறைவுப் பகுதியில் இருக்கிறோம். அடுத்த 4 நாட்கள், அதன் நிறைவாக நல்ல மழை எதிர்பார்க்கலாம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவில் மழைக்கான வாய்ப்பு உள்ளது.
அடுத்து வரும் 4 நாட்களும் மிக மிக சுவாரஸ்யமான நாட்களாக உள்ளன என்று பதிவிட்டுள்ளார்.