மாணவர்கள் ஆர்வம் காட்டாத காரணத்தால் வரும் கல்வியாண்டில் தமிழ் வழி பி.இ. இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
சீனா, ஜப்பான் நாடுகளைப் போல பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளை தாய் மொழியில் நன்கு புரிந்து படிக்க வசதியாக, கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக அரசு அறிவித்தபடி, 2011-ஆம் ஆண்டு முதல் தமிழ் பொறியியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.
பொறியியல் இயந்திரவியல் பிரிவில் 719 இடங்களும், கட்டுமானப் பொறியியல் (சிவில்) படிப்பில் 655 இடங்களும் ஒப்பளிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும், 17 உறுப்புக் கல்லூரிகளில் மட்டும் இந்த தமிழ் வழி படிப்புகள் வழங்கப்படுகின்றன.
ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இந்த இரு படிப்புகளிலும் சேர்ந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை, பல்கலைக்கழக வளாகத் தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படாதது போன்ற காரணங்களால் தமிழ் வழி படிப்புகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாகக் குறைந்தது. இந்த நிலையில், இதை ஊக்குவிக்கவும், தமிழ் வழி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 18-ஆவது தமிழ் இணைய மாநாடு தொடக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், தமிழ் வழி பி.இ. படிப்புகளில் சேர மாணவர்கள் போதிய அளவில் ஆர்வம் காட்டாத காரணத்தால், வரும் கல்வியாண்டு முதல் இரு தமிழ் வழி பி.இ. படிப்புகளுக்கும் ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் குறைக்கப்படும் என்றார்.