இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன்பிடித்தாகக் கூறி கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சென்னை வந்தனர்.
கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்றபோது எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (31), பாலகிருஷ்ணன்(47), கார்த்தி(22), சதீஷ்(21), மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் செம்புமகாதேவிபட்டிணம் என்கிற ஏம்பவயல் கிராமத்திலிருந்து கடந்த மாதம் 20-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தொண்டீஸ்வரன்(25), முத்துமாரி(30), தனிக்கொடி(35), ராமலிங்கம்(42), உள்ளிட்ட 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி மீனவர்கள் வழக்கை விசாரித்த ஊர்க் காவல்துறை நீதிமன்ற நீதிபதி யூட்சன் எதிர்காலங்களில் கடல் எல்லைக்குள் வரக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் மீனவர்களை விடுதலை செய்தார்.
மேலும் படகுக்கான உரிய ஆவணங்களுடன் வரும் நவம்பர்1-ஆம் தேதி படகின் உரிமையாளர் ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், தவறும்பட்சத்தில் படகு இலங்கை அரசுடமையாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்களும் வெள்ளிக்கிழமை 6 மணிக்கு விமானம் மூலம் சென்னை
வந்தடைந்தனர்.