வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு மழை தொடரும். தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
பலத்த மழை: திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மழை அளவு: சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், சேலம் மாவட்டம் ஓமலூர், திண்டுக்கல்லில் தலா 60 மி.மீ., சேலம் மாவட்டம் மேட்டூரில் 40 மி.மீ., தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தலா 30 மி.மீ. மழை பதிவானது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இதமான சூழல்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. சனிக்கிழமை, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேக மூட்டமாகக் காட்சி அளித்தது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.