நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமு-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மதிமுக, மமக மற்றும் விசிக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் காலியாகவுள்ள நான்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதன் முடிவில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுவதாகவும், நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாகவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கூட்டணிக் கட்சிகளும் இந்த இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. முதலாவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இதன்பிறகு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டணியின் வெற்றிக்கு விசிக முழுமையாக பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.