ஐ.ஆர்.சி.டி.சி சார்பில், ஆன்மிக சுற்றுலாத் தலங்களுக்கு முதன்முறையாக ஏசி ரயில்களை இயக்கப்பட உள்ளன.
இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவாக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாகழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) செயல்படுகிறது. இதன் சார்பில், பாரத தரிசன ஆன்மிக சுற்றுலா, ரயில் சுற்றுலா, எல்டிசி பேக்கேஜ், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக கல்வி சுற்றுலா என சிறப்பு சுற்றுலாகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஆன்மிக சுற்றுலாத் தலங்களுக்கு முதன்முறையாக ஏசி ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஐ.ஆர்.சி.டி.சி. செய்துள்ளது.
இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி. இணைப் பொதுமேலாளர் பி.ஷாம் ஜோசப்,, மேலாளர் எல்.சுப்பிரமணி ஆகியோர்
கூறியது:
யாத்திரை செல்லும் பயணிகளுக்கு வசதிக்காக ஏசி ரயில் மூலமும் இந்தியாவின் பல இடங்களுக்கு சுற்றுலாக்கள், யாத்திரைகள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சியில் இருந்து அடுத்த மாதம் 19-ஆம் தேதி புறப்படும் ஏசி ரயில் பெங்களூரு, சென்னை வழியாக உத்தரப் பிரதேச மாநிலம் செல்கிறது.
அங்குள்ள திவ்ய தேசத் தலங்களான நைமிசாரண்யம் ஸ்ரீ தேவராஜ பெருமாள், ஸ்ரீராமர் மற்றும் நேபாள நாட்டில் அமைந்துள்ள ஸ்ரீ கஜேந்திர மோட்ச சாளக்கிராம மூர்த்தி ஸ்தலம், முக்திநாத் ஸ்ரீ மூர்த்தி பெருமாள் திவ்ய தேசம், போக்ராவில் அமைந்துள்ள பிந்துபாஷினி ஆலயம், தவி அருவி, மகேந்திர குகைகள், உலக அமைதி நினைவாலயம் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 13 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலா ஏசி ரயில் பயணம், ஏசி அறைகள், ஏசி வாகனம், விமான கட்டணம், உணவு உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கும். ஒருவருக்கான கட்டணம் ரூ.53,330 முதல் ரூ.63,400 வரை.
இதேபோல, "தி குளோரி கிங்டம்' என்னும் சுற்றுலாத் திட்டமும் உள்ளது. லக்னெள, புத்தர் பிறந்த லும்பினி, போக்ராவில் உள்ள பிந்து பாஷினி ஆலயம், பகவதி அம்மன், தர்பார் சதுக்கம், பசுபதி நகர், புத்த நீல்கண்ட ஆலயம் ஆகியவற்றை தரிசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ஒருவருக்கான கட்டணம் ரூ.50,600 முதல் ரூ.53,680 வரை ஆகும். மேலும் விவரங்களுக்கு, 9003140680, 9003140681 என்ற எண்களை தொடர்பு கொண்டு பெறலாம் என்றனர்.