கீழடி அகழாய்வு பகுதியை சர்வதேச அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கீழடி அகழாய்வில் தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை மிக மூத்தது, முதன்மையானது என்பது தொல்லியல் ஆய்வில் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொடுமணல், அழகன்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருள்களின் ஆதாரங்களைவிடத் தொன்மையான ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ளது. கி.மு.6-ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் கற்றறியும் நிலையில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கீழடி அகழாய்வுப் பணிகள் சர்வதேச தரத்தில் ஆய்வு செய்ய வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைக் கருத்தில் கொண்டு கீழடி அகழாய்வுப் பகுதியை சர்வதேச அருங்காட்சியகமாக மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்றார்.