வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களின் அநேக இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களின் அநேக இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மழை தொடரும்.
பலத்த மழை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மழை அளவு: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் தலா 70 மி.மீ., தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவானது.