புவி வெப்பமடைதல் பேராபத்தைத் தடுக்க காலநிலை அவசரநிலையை அறிவிக்கக் கோரி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் நடைபெறும் பிரசாரத்தை பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
சென்னையில் எம்ஜிஆர் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் முன்பு திங்கள்கிழமை இந்தப் பிரசாரத்தை அவர் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியது:
புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியசுக்குக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐ.நா.வின் காலநிலை குறித்த சிறப்பு அறிவிக்கை தெரிவிக்கிறது. அதனால், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உடனடியாக காலநிலை அவசரநிலையைப் பிரகடனப்படுத்த வேண்டும்.
பெரும் வறட்சி, புயல், தண்ணீர் தட்டுப்பாடு என்று புவி வெப்பமயமாதலால் தமிழகம் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாக உள்ளது. காலநிலை அவசர நிலை பிரகடனத்தை கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் அறிவித்துள்ளன. இதனை இந்தியாவும், தமிழகமும் பின்பற்ற வேண்டும். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த மின்சார வாகனம், நீர் வழி மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.
இந்த பிரசாரத்தில் பங்கேற்றோர் காலநிலை அவசர நிலையைப் பிரகடனப்படுத்தக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். செப்டம்பர் 29-ஆம் தேதி வரை சென்னை முழுவதும் இந்த பிரசாரம் நடைபெற உள்ளது.