தமிழகம், புதுச்சேரியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட உள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மேலும், இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
விக்கிரவாண்டி, நான்குனேரி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனுக்கள் அளித்தோரிடம் நேர்காணல்கள் நடத்தப்பட்டன.
தேர்தல் பணிக் குழு: இடைத்தேர்தல் பிரசார பணிக் குழுக்களை அமைப்பது குறித்தும், பிரசார யுக்திகள் பற்றியும் அதிமுக தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்டோரும், கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், துணை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பிரசார தேர்தல் குழு அமைப்பது பற்றி கூட்டத்தில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இந்த நிலையில், இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்த அறிவிப்பு புதன்கிழமை காலை வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் புதன்கிழமை காலை வெளியிடப்படும். இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.