கோவையில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து திமுக கூட்டணி நடத்த இருந்த முழு அடைப்புக்குத் தடை

சொத்து வரி உயர்வைக் கண்டித்து கோவையில் செப்டம்பர் 27ஆம் தேதி திமுக கூட்டணியின் சார்பில் நடைபெற இருந்த ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சொத்து வரி உயர்வைக் கண்டித்து கோவையில் செப்டம்பர் 27ஆம் தேதி திமுக கூட்டணியின் சார்பில் நடைபெற இருந்த ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோவை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தியதைக் கண்டித்து செப்டம்பர் 27ம் தேதி கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்த திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்து அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டத்துக்கு எதிராக வழக்குரைஞர் தினேஷ் குமார் தொடர்ந்த வழக்கில், போராட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரி உயர்வு குறித்து கோவை மாவட்ட மோட்டார் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (கோப்மா) தலைவர் மணிராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

இந்தியா முழுவதும் ஒரே வரிமுறையை கொண்டுவந்தால் மூலப் பொருள்கள் விலை குறையும் என்றும், அதன்மூலம் உற்பத்திப் பொருள்களின் விலையும் குறையும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு எவ்விதமான மூலப்பொருள்களின் விலை குறையாததோடு கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகிறது.

இதனால் குறுந்தொழில் செய்வோர்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் மட்டுமே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மோட்டார் பம்புசெட் உற்பத்தியாளர்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்பு நிறுவனங்கள், கூலிக்கு வேலை செய்யும் ஜாப் ஒர்க் நிறுவனங்களின் மூலதன கடன் தொகை அதிகரித்தது. ஜிஎஸ்டியில் பெருநிறுவனங்களுக்கும்-குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் வேறுபாடின்றி மத்திய அரசு தனது வரிக்கொள்கையை வகுத்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரூ.1.5 கோடி வரை உற்பத்தி-விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு முழு கலால் வரி விலக்கு அளிக்க வேண்டும். மத்திய அரசு புதிய சலுகைகள் தராவிட்டாலும் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த சலுகைகளைப் பறித்ததால் பல்லாயிரக்கணக்கான குறுந்தொழில் நிறுவனங்கள் முடங்கிவிட்டன. ஏறக்குறைய 70 சதவீத குறுந்தொழில் கூடங்கள் வாடகைக் கட்டடங்களிலேயே இயங்கி வருகின்றன.

நூறு சதவீத அளவுக்கு சொத்து வரி அதிகரித்தால் வாடகையும் பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, நூறு சதவீதம் சொத்து வரி உயர்த்தியதை முற்றிலும் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை அடைத்து செப்டம்பர் 27ஆம் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com