குன்னூர் மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், குன்னூருக்கு 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மலை ரயில் வெள்ளிக்கிழமை புறப்பட்டது. குன்னூர் அருகேயுள்ள ஹில் குரோவ் பகுதியில் இரு பெரிய பாறைகள் தண்டவாளத்தில் விழுந்துகிடப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் கல்லாறுக்கு திருப்பிவிடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பாறைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் பாறைகளை உடைக்க முடியாததால் தாமதம் ஏற்பட்டது. இதனால் 5 மணி நேரத்துக்குப் பின் மலை ரயிலில் கல்லாறு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு அங்கிருந்து பேருந்துகள் மூலம் குன்னூர், உதகைக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பாறைகளை உடைக்க முடியாததால் வெடிவைத்து பாறையை அகற்ற ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை மதியம் 3.15 மணிக்கு குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் மீண்டும் மலை ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.