தமிழர்களின் வரலாற்றை உலகுக்கு வெளிக் கொணர்ந்த கீழடியின் தொன்மையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகளை அவர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கீழடி அகழாய்வின் மூலம் கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழர்கள் மிகத் தொன்மையான நகர, நாகரிகத்துடன் வாழ்ந்திருப்பது தெரியவருகிறது.
உத்தரப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேபோன்று, கீழடியையும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து, இங்கு கிடைத்துள்ள தொல் பொருள்களை காட்சிப்படுத்துவதற்கு உலக தரத்திலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
இதுதொடர்பாக அண்மையில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள சார்பில் மத்திய இணையமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். கீழடியைப் போன்று ஆதிச்சநல்லூரிலும் அகழாய்வுப் பணிகள் தொடர வேண்டும். இந்திய வரலாறு எழுதப்பட வேண்டுமாயின் தெற்கிலிருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என அறிஞர்கள் பலர் தெரிவித்துள்ளனர். ஆனால் இனி வரும் காலங்களில் இந்திய வரலாறு தமிழகத்திலிருந்து தான் தொடங்கப்பட வேண்டும். அதற்கு கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள தொல் பொருள்களே சான்றுகள். அத்தகு சிறப்பும், தமிழர்களின் வரலாற்றையும் உலகுக்கு வெளிக் கொணர்ந்த கீழடியின் தொன்மையை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், எம்எல்ஏக்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.