சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் வெங்கடேசன் மகன் உதித் சூர்யா, தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்தார். உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரிக்கு அண்மையில் மின்னஞ்சல் மூலமாக புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் விசாரணை செய்தது. இதில், ஆள் மாறாட்டம் செய்து உதித் சூர்யா நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். தேனி மாவட்ட காவல்துறையின் தனிப்படையினர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைமறைவாக இருந்த உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரை கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கெனவே பல மாணவர்கள் இதேபோல ஆள் மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ். படித்து வருவதும், இதற்காக சில தரகர்கள் கேரளம், மஹாராஷ்டிரம் மாநிலங்களில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரிகள், ஆள் மாறாட்டம் செய்த மாணவர்கள் குறித்தும், தரகர்கள் குறித்தும் விசாரணையை தொடங்கினர்.
இதில் முதல் கட்டமாக சென்னை புறநகர் பகுதியில் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் 3 மாணவர்களும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரும் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அத் தகவலின் அடிப்படையில் 4 மாணவர்களிடமும் அவர்களுடைய பெற்றோர்களிடமும் சிபிசிஐடி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனர். இதற்கிடையே ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்கும் கேரளத்தைச் சேர்ந்த ஒரு தரகரிடமும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்தனர்.
இந்நிலையில், நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரிக்கப்பட்ட 3 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களையும் கைது செய்து சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக மேலும் சில மாணவர்களையும், தரகர்களையும் தேடி வருவதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.