நீட் தேர்வில் முறைகேடுகளுக்கு இடம் அளிக்கக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வின் அடிப்படையில் சேர்ந்த மாணவ, மாணவியர் புகைப்படத்தில் மாறுதல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஆள்மாறாட்டம், புகார்கள் ஆகியவை எல்லாம் விசாரணையின் மூலம் உண்மை என்று தெரிய வந்தால் இதில் சம்பந்தபட்டவர்கள் அனைவரின் மீதும் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக மாணவர்கள் முறையிட்டும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு முறையில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றால் மாணவர்கள் மத்தியில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நம்பகத்தன்மை முழுமையாக இருக்காது. எனவே, நீட் தேர்வை முறைகேடுகளுக்கு இடம் அளிக்காத வகையில் நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.