வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப். 29) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதவிர, 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
இதன்காரணமாக, தென்தமிழகத்தில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (செப். 29) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
பலத்த மழை: தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். மழைக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்றார் அவர்.