இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நியமித்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இடைத்தேர்தலையொட்டி நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நியமித்துள்ளார். இதன்படி நாங்குனேரி தொகுதிக்கு எச்.வசந்தகுமார் எம்.பி தலைமையில் ஒரு குழுவும், விக்கிரவாண்டி தொகுதிக்கு எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.