தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வில் பொது தமிழ் நீக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள தமிழையும், தமிழக இளைஞர்களையும் புறக்கணிக்கும் இந்தப் பாடத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக திரும்பப் பெறாவிடில், திமுக சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பும், மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
வைகோ: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் எழுதும் குரூப்-2 தேர்வு பாடத்திட்டத்தில் மொழித்தாள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது. தமிழ் பாடத்தை நீக்கி இருப்பதன் மூலம் தமிழே தெரியாமல் ஒருவர் மாநில அரசுப் பணியில் சேருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி. உடனடியாக புதிய பாடத் திட்டத் தேர்வு முறையை திரும்பப் பெற வேண்டும்.
தி.வேல்முருகன்: குரூப் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம் என்ற மொழிப் பாடங்களும் உண்டு. தமிழர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையில் கல்வி கற்பவர்கள். எனவே இரு மொழிகளிலும் சாதிப்பார்கள். ஆனால் வடமாநிலத்தவர்கள் தங்களின் தாய்மொழி தவிர வேறு மொழிக்குப் பழக்கமில்லாதவர்கள். அவர்களின் பாடத் திட்டமும் கற்றல் திறனும் அப்படியாக அமைந்திருக்கிறது. அதனால்தான் குரூப் 2 தேர்வில் மொழித்தாளே வேண்டாம் என்று நீக்கி விட்டனர்.
தொல்.திருமாவளவன் (விசிக): குரூப் 2- தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது தமிழ்வழி மாணவர்களை வடிகட்டுவதற்கான முயற்சியே ஆகும். உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று வழக்கம்போல் முதல்நிலைத் தேர்வில் மொழிப் பாடம் இடம்பெற அனுமதிக்க வேண்டும்.