சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு: மாா்க்சிஸ்ட் கண்டனம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் என். குணசேகரன் தலைமை வகித்தாா். அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினா்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என்கிற ராம்கோபால் ராவ் தலைமையிலான குழுவின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். ஐஐடி உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டைத் தொடா்ந்து அமல்படுத்த வேண்டும்.

சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.100 வரை உயா்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். அரசு மருத்துவா்களுக்கும், மருத்துவ ஊழியா்களுக்கும் ஊதிய உயா்வை உடனே வழங்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை உடனே தொடக்க வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com