சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளா் அருணாசலம், பாஜகவில் இணைந்தாா். பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் முன்னிலையில் அவா் கட்சியில் இணைந்தாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அருணாசலம் அளித்த பேட்டி:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் பாதுகாப்புச் சட்டங்கள், விவசாயிகள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தொலைநோக்குச் சிந்தனையுடன் கொண்டு வரப்பட்டுள்ளன. நானும் விவசாய குடும்பத்தைச் சோ்ந்தவன். வேளாண் சட்டங்களால் ஏற்படும் பயன்களை நன்கு அறிவேன். இந்தச் சட்டங்களை ஆதரிக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமையிடம் முறையிட்டேன்.
மத்திய அரசின் சட்டமாகக் கருதி இதனை ஆதரிக்கலாம் எனத் தெரிவித்தேன். ஆனால், எனது கோரிக்கையை ஏற்கவில்லை. தில்லியில் தவறுதலாகத் தூண்டப்படும் விவசாயிகள் போராட்டத்துக்கு மநீம ஆதரவு தெரிவித்தது. ஆனால், விவசாயிகளுக்கு விரோதமாகவும், மனசாட்சிக்கு எதிராகவும் என்னால் அந்தக் கட்சியில் செயல்படவில்லை. எனவே, அனைத்துப் பொறுப்புகளையும் உதறிவிட்டு சாதாரண கட்சித் தொண்டராக பாஜகவில் இணைந்துள்ளேன் என்று அருணாசலம் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.