தடையை மீறி வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் 7 நாட்களில் 1,25,793 பேர் கைதாகி ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு கடந்த 24ம் தேதி முதல் அமலில் உள்ளது. இதனால் அனைத்து போக்குவரத்து வசதிகளும் முடக்கப்பட்டுள்ளன. கரோனா பரவலைத் தடுக்க மக்கள் வீட்டிலேயே இருக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
அத்தியாவசியத் தேவைகள் தவிர தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறையும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தடையை மீறி வெளியே சுற்றியதாக 1,08,922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 7 நாட்களில் 1,25,793 பேர் கைதாகி ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 85,850 வாகனகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.